
சென்னை:
காரைக்குடி, சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 64). நகை வியாபாரம் செய்துவரும் இவர், சென்னை சவுகார்பேட்டையில் நகைகளை கொள்முதல் செய்துவிட்டு இரவு எழும்பூரில் பழைய காவல் ஆணையர் அலுவலகம் அருகே தங்க நகை, வெள்ளிப் பொருட்கள், மொத்தம் ரூ.50 லட்சம் பணம், நகை அடங்கிய பையுடன் பேருந்துக்காக காத்திருந்தார். அங்கு காரில் வந்த கும்பல் ரவிச்சந்திரனை வலுக்கட்டாயமாக காரில் கடத்தியது. பின்னர் அவரது வாயில் துணியை வைத்து அடைத்து, கை, கால்களை கயிற்றால் கட்டி கத்திமுனையில் அவரிடமிருந்த நகை, பணம் அடங்கிய பையை பறித்தது. பின்னர், அவரை போரூர் அருகே உள்ள பிரபல தனியார் மருத்துவமனை அருகே காரிலிருந்து கீழே தள்ளிவிட்டு தப்பியது. அதிர்ச்சி அடைந்த அவர் பயத்தில் உடனடியாக சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். பின்னர் நண்பர்கள், உறவினர்களிடம் ஆலோசித்து சென்னைக்கு வந்து எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி அக்காவல் நிலைய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். தலைமறைவான கொள்ளையர்களைப் பிடிக்க திருவல்லிக்கேணி துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்படு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், நகை வியாபாரி ரவிச்சந்திரனை கடத்தி கொள்ளையில் ஈடுபட்டது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கமல் (வயது 36), முத்துராமலிங்கம் (வயது 45), தினகரன் (வயது 36), பிரேம்குமார் (வயது 38), முத்துலிங்கம் (வயது 42), மதுரை சேர்ந்த பிரபு (வயது 42) என்பது தெரியவந்தது. தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 203 கிராம் தங்க நகைகள், வெள்ளி கட்டிகளுடன் 3.2 கிலோ வெள்ளிப் பொருட்கள், பணம் ரூ.6.50 லட்சம் மீட்கப்பட்டது. குற்றச் சம்பவத்துக்கு பயன்படுத்திய செல்போன்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கும்பல் இதேபோல், சிவகங்கையிலும் கைவரிசை காட்டியுள்ளது விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
GIPHY App Key not set. Please check settings