கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகே தங்க நாடார் நகரை சேர்ந்தவர் ரிஷி (வயது 21). அந்த பகுதியில் உள்ள கோழிக்கடையில் பணியாற்றி வருகிறார். அண்மையில் இரவு நேரத்தில் தனக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை தங்க நாடார் நகரில் உள்ள ஒரு வெல்டிங் கடையின் அருகே நிறுத்தி வைத்திருக்கிறார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது அவரது இருசக்கர வாகனம் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் சுசீந்திரம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரிக்க தொடங்கினார். சிசிடிவி காட்சியில் பார்த்த போது, நள்ளிரவில் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் ரிஷியின் மோட்டார் சைக்கிளை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. அந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் சுசீந்திரம் போலீசார் ஆண்டார்குளம் பஸ் ஸ்டாண்ட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது, இருசக்கர வாகனத்தை திருடியவர்களுடன் தொடர்புடைய 2 பேர் வருவதை போலீசார் கண்டனர். உடனே அவர்களை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை கொடங்காவிளா அருகே உள்ள தவளக்குளம் பகுதியை சேர்ந்த நிதின் (19), நெய்யாற்றின்கரை தனோசரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அவர்கள் புத்தளம் அருகே தங்கநாடார் நகரில் திருட்டுபோன ரிஷியின் மோட்டார் சைக்கிளை திருடியதும் விசாரணையில் தெரியவந்தது
இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில், நிதின் தனக்கு மோட்டார் சைக்கிள் விலைக்கு வாங்குவதற்காக தனது நண்பர்களான 16 வயது சிறுவன் உள்பட 4 பேருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு போயிருக்கிறார்.
நிதின் பல பழைய மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் கடைகளில் ஏறி இறங்கியிருக்கிறார். ஆனால் நிதினுக்கு எந்த வாகனமும் பிடிக்கவில்லையாம். இந்தநிலையில் அவர்கள் நள்ளிரவில் தங்கநாடார் நகர் பகுதிக்கு வந்திருக்கிறார்கள். அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரிஷியின் பைக்கை பார்த்த உடனேயே நிதினுக்கு பிடித்து விட்டது. உடனே நிதின் நண்பர்களுடன் சேர்ந்து அந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்று பதிவெண் பிளேட்டை மாற்றி ஓட்டி வந்திருக்கிறார்.
இதையடுத்து சுசீந்திரம் போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்து நாகர்கோவில் மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர் படுத்தினாரகள். மாஜிஸ்திரேட்டு , பைக்கை திருடிய நிதினை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். மற்றொருவர் 16 வயது சிறுவன் என்பதால் அவரை ஜாமீனில் விட உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து நிதினை போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
GIPHY App Key not set. Please check settings