மேட்டூர் அருகில் வடமாநிலத்தைச் சேர்ந்த பஸ் டிரைவர் மற்றும் கிளீனர் போலீசாரை இரும்பு ராடால் சரமாரியாக தாக்கிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது
உத்தரப்பிரதேச மாநிலத்தை சார்ந்த சுற்றுலாப் பயணிகள், சொகுசு பேருந்தில் தமிழகத்திற்கு ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். நேற்று இவர்கள் சேலம் மாவட்டம் மேட்டூர் வழியே கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரன் மலைக்கு சென்றனர். அப்போது தமிழக மற்றும் கர்நாடகா எல்லையான காரைக்காட்டில் உள்ள சோதனைச் சாவடியில் பேருந்தை நிறுத்தி அங்கு பணி புரிந்து கொண்டிருந்த தலைமை காவலர்கள் செந்தில்குமார் மற்றும் சுகனேஸ்வரன் ஆகிய இருவரும் சோதனை நடத்தி உள்ளனர்
பேருந்தில் மதுபானங்கள் ஏதேனும் உள்ளதா? பேருந்திற்கு அனுமதி உள்ளதா என கேட்டுள்ளனர்? அப்போது திடீரென பேருந்து ஓட்டுநருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் உருவானது. ஒரு கட்டத்திற்கு மேல் கோபமடைந்த ஓட்டுநர் சிவநாராயணன், காவலரின் கன்னத்தில் அறைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த 2 போலீசாரும் அவரை திருப்பி அடித்தனர். இதை கண்டு ஆத்திரமடைந்த பஸ் கிளீனர் அஜய் (20), பேருந்தில் இருந்த இரும்பு குழாயை எடுத்து வந்து போலீசாரை தாக்கியுள்ளார்.
இதனால், இரண்டு போலீசாரும் படுகாயமடைந்தனர். இதற்கிடையே, போலீசார் மீது வடமாநிலத்தினர் தாக்குதல் நடத்தியதை கண்ட அங்குள்ள மக்கள், ஓடி வந்து அவர்களை தாக்கத் தொடங்கினர். இதனால், அங்கு பெரும் சல சலப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த மேட்டூர் டிஎஸ்பி ஆரோக்யராஜ், கொளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், படுகாயமடைந்த இரண்டு காவலர்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும், காவலர்களை தாக்கிய பேருந்து ஓட்டுநர் சிவநாராயணன், கிளீனர் அஜய் ஆகியோரை கொளத்தூர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து பின்னர் அவர்களை ஜாமீனில் விடுவித்தனர். மேலும், பேருந்தில் பயணிகள் இருந்ததால், நேற்று மாலை போலீஸ் பாதுகாப்புடன் அந்த பேருந்தில் தமிழக எல்லையை கடந்து சென்றனர். அதே சமயம், இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் சிவநாராயணன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், ” பெருந்திற்கான உரிய ஆவணங்களை காண்பித்தாலும், சோதனைச் சாவடியில் இருந்த போலீசார், தங்களிடம் பணம் கேட்டதாகவும், பணம் தர மறுத்ததால் தங்களை தாக்கியதாகவும் ” தெரிவித்திருந்தார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.



GIPHY App Key not set. Please check settings