
தூத்துக்குடி:
ஸ்ரீவைகுண்டம் அரியநாயகிபுரம் கிராமத்தில் வசித்து வரும் (17வயது) சிறுவன், திருநெல்வேலியில் தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவன் வழக்கம்போல, பேருந்து ஒன்றில் ஏறி திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டு இருந்தார். கெட்டியம்மாள்புரம் கிராமத்தில் பேருந்தை மூன்று பேரால் வழி மறிக்கப்பட்டது. பேருந்துக்குள் ஏறிய மூன்று பேர் மாணவனை பேருந்தில் இருந்து கீழே தள்ளி, அவரை சரமாரியாக வெட்டினார்கள். இந்த சம்பவத்தில் மாணவனின் முகம், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த பயணிகள் மூன்று பேரையும் தடுக்க முற்பட்டதால், அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். தகவல் அறிந்து வந்த ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர், சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிறுவன் திருநெல்வேலி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சிறுவன் மீது கபடி விளையாட்டில் ஏற்பட்ட விரோதம் தொடர்பாக கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாதுகாப்பு கருதி கூடுதல் காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
GIPHY App Key not set. Please check settings